![](admin/uploads/.5f4dfd8bc2de59.76512367.png)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராமநாதபுரம்: தனுஸ்கோடியில் கைது செய்யப்பட்ட இலங்கை போலீஸ் பிரதீப் குமார் பண்டாராவை 5 நாள் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு ராமநாதபுரம் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடியை அடுத்த கம்பிபாடு கடற்கரையில் கடந்த 5ம் தேதி மெரைன் போலீசாரால் இலங்கை மொனராகலை பகுதியைச் சேர்ந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் காவலராக பணியாற்றி வரும் பிரதீப் குமார் பண்டார என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். போதை பொருள் விற்பனை செய்வதில் இவருக்கும் தமிழகத்தில் உயிரிழந்த இலங்கை நிழல்உலக தாதா அங்கொட லொக்காவுக்கு தொடர்பு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து 5 நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ்கந்த பகுதியிலுள்ள மர கடையிலிருந்து இலங்கை போலீசாரால் கைப்பற்றப்பட்ட 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளுடன் மர கடையின் உரிமையாளர் மற்றும் காவலர் பிரதீப் குமார் பண்டாராவின் சகோதரர் என இருவர் கைது செய்யப்பட்டனர். பிரதீப் குமார் பண்டாரா தனது சகோதரர் மூலம் மர கடையின் உரிமையாளருக்கு ஹெராயின் போதைப்பொருளை விநியோகித்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும், கைப்பற்றப்பட்ட ஹெராயின் மூட்டையில் அச்சிடப்பட்டிருந்த முத்திரையும், தமிழகத்தில் உயிரிழந்த இலங்கை நிழலுலக தாதா அங்கொட லொக்காவின் போதைப்பொருள் மூட்டைகளில் உள்ள முத்திரையும் ஒன்றாக இருந்ததால் பிரதீப் குமார் பண்டாரா இலங்கை போலீசாரிடம் இருந்து தன்னை காப்பற்றி கொள்ள மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக பைபர் படகு ஒன்றில் தமிழகம் தப்பி வந்தார். மெரைன் போலீசாரால் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் பண்டாரா விசாரணைக்கு பின் ராமேஸ்வரம் நடுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தற்பொழுது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் பண்டாராவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில்,நேற்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்பொழுது குமார் பண்டாராவை 5 நாட்கள் சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்தது. விசாரணை முடிந்ததும், அவரை 21ம் தேதி, மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.