Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இறுதியாண்டு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்: புதுச்சேரி பல்கலை

செப்டம்பர் 18, 2020 08:11

புதுச்சேரி:''இறுதியாண்டு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்,''  என்று புதுவை மத்திய பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா காரணமாக கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய இறுதியாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவை மத்திய பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லாசர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுவை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு தேர்வு எழுத ஆன்லைன், மாணவர்கள் விரும்பும் வகையில் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரையின்படி இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு அறைகளில் புத்தகம், குறிப்பேடுகள் மற்றும் பிற ஆய்வு பொருட்களை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறது. கேள்விகளுக்கான பதில்களை மாணவர்கள் புரிந்துகொண்டு பதில் அளிக்க இந்தமுறை வழிவகை செய்யும். தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் மாணவர்கள் தங்கள் புத்தகம் மற்றும் குறிப்பேடுகளை பரிமாறாமல் இருப்பதை தலைமை கண்காணிப்பாளர் உறுதி செய்வார்கள்.

தேர்வுகளின் காலம் மற்றும் பிற நிபந்தனைகளும், வினாத்தாள்களின் முறை ஆகியவை ஏற்கனவே முன்பு இருந்த படியே இருக்கும். மாணவர்கள் ஏ4 வெள்ளைத் தாளில் கருப்பு மை கொண்டு பதில் அளிக்க வேண்டும். தேர்வு எழுதிய அனைத்து பக்கங்களையும் தேர்வு முடிந்த 30 நிமிடத்திற்குள் ஸ்கேன் செய்து அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். முதல் பக்கத்தில் மாணவர்களின் பதிவு எண், பாடம், பிரிவு, தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தங்கள் கையெழுத்தை முழுமையாக எழுத வேண்டும். 2-ம் பக்கத்தில் இருந்து விடைகளை எழுத தொடங்க வேண்டும்.
இவ்வாறு புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்