Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ்நாட்டில் பொருளாதார மந்தநிலை 2 மாதங்களில் மாறும்- நிபுணர் குழு தலைவர் சி.ரங்கராஜன்

செப்டம்பர் 21, 2020 09:18

சென்னை:கொரோனா நோய் தொற்று பரவியதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பொருளாதாரத்தில் கடும் முடக்கம் ஏற்பட்டது. குறிப்பாக வேளாண்மை, தொழில், சேவை துறைகளான சுற்றுலா, கட்டுமானம், ரியல் எஸ்டேட், சில்லரை வர்த்தகம் ஆகியவற்றில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன.

இதையடுத்து தமிழக பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் பல்வேறு துறை வல்லுனர்கள் கொண்ட நிபுணர் குழு உருவாக்கப்பட்டது. இந்த நிபுணர் குழு தலைவராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், சென்னை பொருளியல் பள்ளி தலைவருமான சி.ரங்கராஜன் செயல்பட்டார்.

இந்த குழுவில் முன்னாள் தலைமை செயலாளர் என்.நாராயணன், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.துரைசாமி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார், சென்னை பொருளியல் பள்ளியின் இயக்குநர் கே.ஆர்.சண்முகம், சென்னை மேம்பாட்டு கல்விக் கழகத்தின் இயக்குநர் பி.ஜி.பாபு, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் என்.சீனிவாசன், டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் பத்மஜா சுந்துரு, ஈக்வடாஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் பி.என்.வாசுதேவன், 14-வது நிதிக்குழுவின் உறுப்பினர் எம்.கோவிந்தராவ், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் எம்.சுரேஷ்பாபு, யூனிசெப் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பினாகி சக்ரவர்த்தி ஆகியோரு டன், குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் செயல்பட்டு வந்தார்.

இந்த நிபுணர் குழு சென்னையில் பல தடவை கூடி ஆய்வுகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசுக்கு பல்வேறு பரிந்துரைகள் கொண்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) நிபுணர் குழுவினர் ரங்கராஜன் தலைமையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமை செயலகத்தில் சந்தித்தனர். அப்போது பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய ஆய்வு அறிக்கையை அவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தனர்.

அதன்பிறகு நிபுணர் குழு தலைவர் சி.ரங்கராஜன் வெளியில் வந்ததும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த சரிவை சீரமைப்பு செய்யும் வகையில் பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு நாங்கள் அளித்துள்ளோம்.

2020-21-ம் நிதியாண்டில் தமிழக பொருளாதார வளர்ச்சி 1.77 சதவீதமாக இருக்கும். நகர் பகுதிகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். சுகாதாரத்துறைக்கு ரூ. 5 ஆயிரம் கோடி செலவிட பரிந்துரை செய்து இருக்கிறோம். மேலும் இலவச அரிசி வழங்குவதை நவம்பர் மாதம் வரை நீட்டிக்க கூறி இருக்கிறோம். குறுகிய கால, நீண்ட கால பரிந்துரைகள் அதிகம் இடம் பெற்றுள்ளது.

எனவே தமிழகத்தில் பொருளாதார மந்தநிலை இன்னும் 2 மாதங்களில் மாறி விடும்.
இவ்வாறு நிபுணர் குழு தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்தார்

தலைப்புச்செய்திகள்