![](admin/uploads/.604335b8c0ce13.31060966.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை கருங்காடு தாமிரபரணி ஆற்றில் சாஸ்தா கோவிலுக்கு பூஜை செய்ய வந்த இடத்தில் நீரில் மூழ்கி, வாலிபர் உயிரிழந்தார். திருநெல்வேலியை அடுத்துள்ள, பேட்டை கருங்காடு பகுதியில், தாமிரபரணி ஆற்றில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக, சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து, அந்த இடத்திற்கு போய், இறந்து கிடந்தவரின் உடலைக் கைப்பற்றிய சுத்தமல்லி போலீசார், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? போன்ற தகவல்கள் குறித்து விசாரித்தனர்.
ஆனால் சரியான விபரங்கள் கிடைக்கவில்லை. பின்னர் கிடைத்த தகவல்களின்படி, இறந்து போன நபர் மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த குமரன் என்பதும், கோபாலசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள, தன்னுடைய குடும்ப கோவிலான, சாஸ்தா கோவிலுக்கு, பூஜை செய்ய வந்தபோது, ஆற்றில் குளித்ததில், ஆழமான பகுதிக்கு சென்றதில், தண்ணீரில் மூழ்கி இறந்ததும் தெரியவந்தது.
கோபாலசமுத்திரம் பகுதியில், தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த அவரின் உடல், சுமார் 4 கிலோமீட்டர் கடந்து வந்து, கருங்காடு பகுதியில், தாமிரபரணி ஆற்றில் கரை ஒதுங்கியது என்பதும், தெரிய வந்தது. இறந்து போன குமரனின் உடலை, பிரேத பரிசோதனைக்காக, சுத்தமல்லி போலீசார், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.