Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குழந்தை இல்லாத ஏக்கத்தில் விபரீத முடிவு: கணவன், மனைவி தூக்கு மாட்டி, தற்கொலை

செப்டம்பர் 27, 2020 09:57

திருநெல்வேலி: திருநெல்வேலியில் திருமணமாகி, 7 ஆண்டுகளுக்கு மேலாகியும், குழந்தை இல்லாத காரணத்தால், கணவன்,  மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட, தச்சநல்லூர் மண்டலத்தில் உள்ள,  நல்மேய்ப்பர் நகர், 16வது தெருவில்,  பிள்ளையார் கோயில் அருகில் வசித்து வந்தவர் மாரியப்பன். பெயிண்டர்(வயது. 35)  இவருடைய மனைவி வடிவு (வயது. 27). இவர்களுக்கு திருமணம் ஆகி, 7 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன.

ஆனால், இதுவரையிலும் இந்த தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. மூன்று முறைகள் கர்ப்பம் தரித்த வடிவுக்கு, தொடர்ந்து கருச்சிதைவு ஏற்பட்டது. நான்காவது முறையாக, குழந்தை உண்டாகி இருந்த வடிவு, மிகவும் பக்குவமாக, பாதுகாப்பாக இருந்தும் கூட, கீழே விழுந்ததில், ஐந்தாவது மாதத்தில், அந்த கருவும் கலைந்து விட்டது. இதனால், இரவில் கணவன்,  மனைவி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தூங்கச் சென்ற இருவரும்  வீட்டுக்குள்ளேயே தனித்தனியாக தூக்கு மாட்டி, தற்கொலை செய்து கொண்டனர். நெடுநேரம் ஆகியும், கதவு திறக்கப்படாததால்,  அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் தச்சநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். 

போலீசார் விரைந்து, வீட்டின் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்ததில், கணவன், மனைவி இருவரும் தூக்கு போட்டு இருப்பது தெரிய வந்தது. இருவரின் உடல்களையும் கைப்பற்றிய தச்சநல்லூர் போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்