Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை

செப்டம்பர் 27, 2020 12:08

சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் அக்டோபர் 1ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். மேலும் மனித சங்கிலி, ஊர்வலம், ஆர்பாட்டத்துக்கு காவல் ஆணையர் தடை விதித்து அனைத்து காவல் நிலையத்திற்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல 
மாநிலங்களில் விவசாயிகள் பஸ் மறியல், போராட்டம், ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். பல மாநிலங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

வேளாண் மசோதாக்களுக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் 28ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திமுக தலைமையிலான எதிர்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

சென்னையில் எதிர்கட்சியினர் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் அக்டோபர் 1ம் தேதி வரை போராட்டம் ஆர்பாட்டம் நடத்த தடை விதித்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்