Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது, பட்டாசு வெடித்து வீடு தரைமட்டமானதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீிட்டில் இல்லாததால் இரண்டு மகள்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். புதுச்சேரி அரியாங்குப்பம் அர்தோனியர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நெப்போலியன் (43). இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு கல்லூரி மற்றும் பள்ளியில் படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நெப்போலியன் தனது வீட்டில் அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் பட்டாசு தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்களையும் தனது வீட்டில் மூட்டை, மூட்டையாக சேமித்து வைத்திருந்துள்ளார். இதனிடையே நெப்போலியன் வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பட்டாசுகள் வெடித்து வீடு தரைமட்டமானது.
இதில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியாங்குப்பம் காவல்நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் நடைபெற்ற போது நெப்போலியனின் இரண்டு மகள்களும் வெளியே சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இச்சம்பவம் குறித்து அரியாங்குப்பம் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.