Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அக்.31 வரை நீட்டிப்பு

செப்டம்பர் 30, 2020 11:20

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூறிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரானா நோய்த்தொற்று காரணமாக, மார்ச் மாதம் முதல், தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒவ்வொரு மாதமும் புதிய புதிய தளர்வுகள் கொடுக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.. இதன் பிறகு மாநில மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தி இதுபோன்ற முடிவுகளை அவர் அறிவிக்கிறார். செப்டம்பர் மாதம் நிறைவடைய உள்ள நிலையில் அக்டோபர் மாதத்திற்கான தளர்வுகள் என்ன என்பது பற்றி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் சுய விருப்பத்தின் பேரில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அரசு ஆணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31-ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான தடை நீடிக்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கான தடை இப்போது போலவே நீடிக்கும். திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கடற்கரைகளுக்கு மக்கள் செல்வதற்கான தடை வரும் 31ம் தேதி வரை நீடிக்கும். திரைப்பட படைப்புகளில் 100 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்பு 50 பேர் வரை மட்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.  ஒருபக்கம் படப்பிடிப்பில் தளர்வுகள் செய்யப்பட்டு இருந்தாலும், தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. அக்டோபர் 31-ம் தேதி வரை திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கும் திறக்க தடை நீடிக்கும். வெளி நாட்டுக்கு விமானங்களை இயங்குவதற்கான தடை நீடிக்கும்.

சென்னையில் வெளிமாநிலங்களில் இருந்து அதிகபட்சமாக 50 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்பட்ட நிலையில் இனிமேல் 100 விமானங்கள் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தேனீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். அதேநேரம் தேனீர் கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 10 மணிவரை பார்சல் சேவை வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தியேட்டர்கள் திறக்கப்படாது என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள்அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஏழு மாதங்களாக திரையரங்குகள் பூட்டி இருக்கும் நிலையில் தொடர்ந்து செயல்படாமல் இருந்தால் ஊழியர்களுக்கு சம்பளம், வாடகை பணம் உள்ளிட்டவற்றை செலுத்துவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு மாதத்திற்கு திரையரங்குகளை திறக்க முடியாத நிலை உருவாகியுள்ளதால் ஓடிடி எனப்படும் தளங்கள் வழியாக திரைப்படங்கள் வெளியாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 

தலைப்புச்செய்திகள்