Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விஜய்சேதுபதி ரசிகர்மன்ற தலைவர் கொலை: மர்மகும்பலை தேடி வரும் புதுச்சேரி போலீஸார்

அக்டோபர் 05, 2020 10:31

புதுச்சேரி: புதுச்சேரியில் நடிகர் விஜய்சேதுபதி ரசிகர்மன்ற தலைவர் இரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்புடைய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி கோவிந்தசாலையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). பெயிண்டர். புதுச்சேரி மாநில விஜய்சேதுபதி ரசிகர் மன்ற தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இவர் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் இருந்து ரெட்டியார்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். நெல்லித்தோப்பு மார்க்கெட் அருகே மணிகண்டன் வந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த மர்மகும்பல் திடீரென்று அவரை வழிமறித்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவரை சுற்றிவளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.

இதில், முகம், தலை உள்பட உடலில் பல்வேறு இடங்களில் மணிகண்டனுக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. வெட்டுக்காயம் அடைந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இது குறித்து தகவலறிந்த கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன், உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித், பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மணிகண்டனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ரசிகர் மன்றத்தில் பதவி நியமிப்பதில் பிரச்சினை இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் உருளையன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி, தப்பியோடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். மணிகண்டன் கொலை செய்யப்பட்ட தகவலறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர் மன்றத்தினர் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். இதனால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்