![](admin/uploads/.5e4522e5283094.05776602.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் வருகிற 7-ந்தேதி (நாளை) முதல்-அமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக செயற்குழு கூட்டத்திற்கு பின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார். இதனிடையே அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் கடந்த சில தினங்களாக ஆலோசனை நடத்திய ஓ. பன்னீர்செல்வம், ‘தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும்’ என்று டுவிட்டரில் நேற்று பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதிமுகவில் முதல்-அமைச்சர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில் முதலமைச்சரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ சந்தித்து ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.