![](admin/uploads/.5f06e223264d51.88877467.gif)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராமநாதபுரம்: நீட் தேர்வு எழுதிய பின் மனச்சோர்வால் மயங்கி விழுந்து உயிரிழந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நீட் தேர்வு எழுதிவிட்டு பேருந்நில் ஊர் திரும்பியபோது மனச்சோர்வால் மயங்கி விழுந்து உயிரிழந்த கமுதி அருகே பாப்பணம் கிராமத்தை சேர்ந்த சந்தியா என்ற மாற்றுத்திறனாளி மாணவியின் பெற்றோருக்கு ரூபாய் 20 லட்சம் நிவாரணம் மற்றும் அக்குடும்பத்தை சார்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாப்பணம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முனியசாமியின் மகள் சந்தியா. மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 2019ல் மதுரையில் நடந்த மருத்துவர் படிப்புக்கான நீட் தேர்வினை எழுதிவிட்டு அரசுப் பேருந்தில் சொந்த ஊருக்கு திரும்பிய போது மனச்சோர்வால் மயக்கமடைந்து உயிரிழந்தார். இவரது உடலை அப்போதைய பரமக்குடி கோட்டாட்சியர் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.
உயிரிழந்த சந்தியாவின் குடும்பத்தினருக்கு 20 லட்ச ரூபாய் அரசு நிவாரணமும், ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அனுப்பினர். ஆனால், இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை.
இதனையடுத்து ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் இறந்த மாற்றுத்திறனாளி மாணவி சந்தியாவின் பெற்றோர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சந்தியாவின் தந்தை முனியசாமி உள்பட ஏராளமான பெண் மாற்றுதிறனாளிகளும் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆட்சியர் வீரராகவ ராவிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.