Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி அருகே லாரி - கார் மோதல் 3 பேர் பரிதாப பலி: 4 பேர் படுகாயம்

அக்டோபர் 06, 2020 08:59

திருச்சி: சேலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற கார் திருச்சி மாவட்டம் முசிறி அருகே நேற்றுமுன்தினம் இரவு லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 4 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், பிரபு, பழனிச்சாமி, கோபால், பிரபாகரன். ராஜலிங்கம், மணி ஆகிய ஏழு பேரும், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலுள்ள தங்களது நண்பர் வீட்டு துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளனர். அந்தக் காரை பிரபு என்பவர் ஓட்டிச் சென்றார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த உமையாள்புரம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில், சதீஷ்குமார், பிரபு, பழனிச்சாமி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், கோபால், ராஜலிங்கம், மணி, பிரபாகரன் ஆகிய நான்கு பேரும் படுகாயங்களுடன் திருச்சி அரசு பொதுமருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து, வழக்குப்பதிவு செய்த முசிறி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்