Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாலை போடும் கூலித்தொழிலாளர் இருவர் மின்சாரம் தாக்கியதில் பலி

அக்டோபர் 07, 2020 05:14

சென்னை: சென்னை மாங்காட்டில் சாலை போடும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளிகள் இருவர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே உள்ள மாங்காடு பேருராட்சிக்கு உட்பட்ட நெல்லிமாநகர் செல்லும் பிரதான சாலை தற்போது புதிதாக போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சாலையை தோண்டி கற்களை கொட்டி சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக 8 கூலித் தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தின் போது லாரியில் வந்த ஜல்லி கற்களை சாலையில் கொட்டி சரி செய்து வந்துள்ளனர். அப்போது லாரி மேலே சென்ற மின்சாரக் கம்பியில் உரசியுள்ளது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் கன்னியப்பன், பச்சையப்பன் ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக அவர்களை இருவரையும் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது இருவரும் உயிர் இழந்து இருப்பது தெரிய வந்தது. பின்னர் இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாங்காடு காவல்துறையினர் கொண்டு சென்றனர். உயிரிழந்த கன்னியப்பன், பச்சையப்பன் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் இருவரும் பரிதாபமாக உயிர் இழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே விபத்து நடைபெற்ற பகுதியில் மின் கம்பிகள் அனைத்தும் தாழ்வாக இருப்பதாகவும் தற்போது விபத்து நடைபெற்ற உயரழுத்த மின் கம்பியை கூட சாலையில் சற்று ஓரமாக  அமைக்க கூறியும் இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இது போன்று மேலும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படாமல்  இருக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்