Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டி.கே.சிவக்குமாரின் சொத்து மதிப்பு: சி.பி.ஐ. தகவல்

அக்டோபர் 07, 2020 07:25

பெங்களூரு : கர்நாடக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருபவர் டி.கே.சிவக்குமார். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு டி.கே.சிவக்குமாரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது ரூ.8½ கோடி சிக்கி இருந்தது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் டி.கே.சிவக்குமார், அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில் டி.கே.சிவக்குமார் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதனால் அமலாக்கத்துறையினரும் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது, சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு கர்நாடக அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் அமைந்திருக்கும் டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், அவரது தம்பியின் வீடு, அலுவலகங்கள், நண்பர்களின் வீடுகள் என 14 இடங்களில் சோதனை நடந்தது. அப்போது ரூ.57 லட்சத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றதாக தகவல்கள் வெளியானது. மேலும் டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் டி.கே.சிவக்குமாரின் சொத்து மதிப்பு 380 சதவீதம் உயர்ந்து உள்ளதாக, சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த வேட்புமனுவில் ரூ.33.92 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது வேட்புமனுவில் சொத்து மதிப்பு ரூ.162.53 கோடி என்று குறிப்பிட்டு உள்ளார். அதாவது 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.128.41 கோடியாக உயர்ந்து உள்ளது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 380 சதவீதம் உயர்ந்து உள்ளது. இந்த காலக்கட்டத்தில் அவருக்கு ரூ.166.79 கோடி வருமானம் வந்ததாகவும், ரூ.113.12 கோடி செலவு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. வருமானத்தை விட அவரது சொத்து மதிப்பு ரூ.74.93 கோடி அதிகமாக உள்ளது.

2013-2018 ஆண்டு கால இடைவெளியில் டி.கே.சிவக்குமார் குவித்த சொத்து விவரங்கள் குறித்து தான் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. மேலும் 2013-ம் ஆண்டுக்கு முன்போ, 2018-ம் ஆண்டுக்கு பின்னரோ அவர் குவித்த சொத்துகள் குறித்து எந்த விசாரணையும் நடைபெறவில்லை. டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ், சிவக்குமாரின் நண்பர்கள் வீடுகளில் சோதனை நடந்த போதிலும், சிவக்குமார் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவராக உள்ளார். அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் மீது கூட வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. டி.கே.சிவக்குமார் சொத்து குவிக்க அவரது நண்பர்களான ஹனுமந்தராயா, சசிகுமார் ஆகியோர் உதவி உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

டி.கே.சிவக்குமார் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மந்திரியாக பணியாற்றி உள்ளார். இந்த காலக்கட்டத்தில் தான் அவர் சொத்துகளை குவித்து இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஓராண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அவர் மந்திரியாக இருந்த போது அவருக்கு உதவி அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது டி.கே.சிவக்குமார் தனது மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு வாங்கி வைத்த நகைகளையும் எடுத்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்