Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேட்பாரற்ற 10 கள்ளத்துப்பாக்கிகள்: சிறுமலை ஓடை அருகே பறிமுதல்

அக்டோபர் 07, 2020 08:05

திண்டுக்கல்: சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தவசிமடை கிராமம் சிறுமலை ஓடை அருகே கேட்பாரற்று கிடந்த 10 கள்ளத்துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி பேரல் 1 கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட கிராமங்களில் சிலர் கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தி சிறுமலை மற்றும் தவசிமடை பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ரவளி ப்ரியா, உத்தரவின்பேரில் திண்டுக்கல் ஊரக உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் வினோத் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் சிறுமலை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான குழுவினர், சிறுமலை, தவசிமடை ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது தவசிமடை கிராமம் நாகம்மாள் கோவில் அருகே உள்ள சிறுமலை ஓடை அருகே 10 நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் நாட்டுத்துப்பாக்கி பேரல் -1 கேட்பாரற்று கிடப்பது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக தவசிமடை கிராம நிர்வாக அலுவலர் திருவருட்செல்வம் கொடுத்த  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 10 நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் நாட்டுத்துப்பாக்கி பேரல் -1 கைப்பற்றப்பட்டது.  இதேபோல திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகிராமங்களான நத்தம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட மலையுர், கரந்தமலை, கொடைக்கானல் காவல் நிலையச் சரகம் மண்ணவனுார், கூக்ககால், புண்டி, தாண்டிக்குடி காவல் நிலையச்சரகம் கே.சி.பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல் நிலையச்சரகம் பாச்சலுார் ஆகிய மலை கிராமங்களில் சிலர் அனுமதியின்றி உரிமம் இல்லாமல் கள்ளத்துப்பாக்கிகள் வைத்திருப்பதாக தெரியவருகிறது.

மேற்படி தேடுதல் வேட்டை தொடரும். அவ்வாறு கள்ளத்துப்பாக்கிகள் வைத்திருக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்ட மலையோர பகுதிகளில் பல்வேறு இடங்களில் கள்ளத்தனமாக மர்மநபர்களால் நாட்டுத்துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதை காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாடுவதற்காக சிலர் விற்று வருகின்றனர். அவ்வப்போது காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்கும். தற்போது 10 நாட்டுத்துப்பாக்கிகள் கண்டெடுப்பதே இதற்கு சாட்சியாகும். இவ்வாறு திண்டுக்கல் மாவட்ட மலையோர கிராம மக்கள் தெரிவித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்