Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் சொத்து பிரச்னையில் ஆத்திரம்: கார், டூவீலரை அடித்து நொறுக்கிய இளம்பெண்

அக்டோபர் 08, 2020 05:29

கோவை: கோவையில் சொத்து பிரச்சிணை தொடர்பாக இளம்பெண் ஒருவர் தனது கணவரின் சகோதரருக்கு சொந்தமான கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை ஆக்ரோஷமாக அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகர் பகுதியை சேர்ந்த தாமஸ்- கிரேசிமேரி தம்பதியரின் மகன்களான சார்லி மற்றும் சால்சன் ஆகியோர் அதே பகுதியில் தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.

பின்னர் தாமஸ் உயிரிழக்கவே மூத்த மகனான சார்லியுடன் தாய் கிரேசிமேரியும் வேறு பகுதியில் சால்சன் தனது குடும்பத்துடனும் தற்போது வசிக்கின்றனர். இந்த நிலையில் தாமஸ் பெயரிலுள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றி தருமாறு சார்லியின் மனைவியான சூர்யா அவ்வப்போது தனது மாமியாரான கிரேசிமேரியுடன் சண்டையிட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று முன்தினம் தனது தாயை காண்பதற்காக சால்சன் சென்றபோது ஆத்திரமடைந்த சால்சனின் சகோதரரின் மனைவியான சூர்யா அறுவருக்கத்தக்க வார்த்தைகளால் சால்சனை திட்டியபடியே அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை கற்களை கொண்டு கடுமையாக தாக்கி சேதப்படுத்தியுள்ளார். மேலும் அங்கிருந்த இருசக்கர வாகனத்தையும் ஆக்ரோஷமாக கீழே தள்ளி கற்களை போட்டு தாக்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சால்சன் மற்றும் அவரது தாயான கிரேசிமேரி ஆகியோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. குடும்ப தகாராறை தெருவிற்கு கொண்டு வந்து மோசமான வார்த்தைகள் பேசி ஆக்ரோஷமாக வாகனங்களை தாக்கும் இளம்பெண்ணின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்