Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவாரூர்: திருவாரூர் அருகே மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் என்பவரை காரில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் எரவாஞ்சேரி அருகே உள்ள மணவளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (48) இவர் தி.மு.க.வைச் சேர்ந்தவர். மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தனது இருசக்கர வாகனத்தில் கணேசன் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் கணேசனை வழிமறித்து, நடுரோட்டில் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது.
ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த கணேசனை அங்கிருந்தவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.