Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனித்தா? கூட்டணி அமைத்து போட்டியிடுவதா?   தலைமை முடிவு செய்யும்: அண்ணாமலை அதிரடி

அக்டோபர் 11, 2020 10:14

திருச்சி: தனித்துப் போட்டியிடுவதா?  அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்பது குறித்து பா.ஜ.க. தலைமை முடிவு செய்யும்,''  என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை திருச்சிக்கு வந்திருந்தார்.

முன்னதாக மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது: பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியுடன் இருக்கிறது. கூட்டணிக்குள் எந்த ஒரு குழப்பமும் சலசலப்பும் இல்லை. புதுக்கூட்டணி தேவை என்பது குறித்து பேச்சுக்கு தற்போது இடமில்லை. கூட்டணி குறித்த முடிவை பா.ஜ.க. தலைமை எடுக்கும். அ.தி.மு.க. கூட்டணியில் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.

பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் நடக்கும்போது மத்திய அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உத்திரபிரதேச  சம்பவத்தில் உடனடியாக 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மற்ற நாடுகளையும், மற்ற நாடுகளின் தலைநகரை காட்டிலும் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. எப்பொழுதாவது நடைபெறும் பிரச்சினையை வைத்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வது ஏற்புடையது அல்ல. தேர்தல் கூட்டணி குறித்து பொன். ராதாகிருஷ்ணன் கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. கொள்கையை ரீதியாகவே அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. வேளாண்மை திட்டங்களை எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதை பார்க்க முடிகிறது. தமிழகம் மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. திராவிட கட்சிகளில் தி.மு.க. எல்லா விஷயங்களிலும் மித மிஞ்சி இருக்கிறது. குடும்ப அரசியல் உட்பட. தனித்துப் போட்டியிடும் அளவிற்கு பா.ஜ.க. விற்கு பலம் இல்லாமல்  இல்லை. எழுபத்தி ஐந்தாயிரம் பூத்களிலும் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது. தனித்துப் போட்டியிடுவதா? அல்லது  கூட்டணி அமைத்து போட்டியிடுவதா?  என்பது குறித்து பா.ஜ.க. தலைமை முடிவு செய்யும்.

இவ்வாறு  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

தலைப்புச்செய்திகள்