Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.தி.மு.க.தான் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது: அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டம் 

அக்டோபர் 12, 2020 12:27

தூத்துக்குடி: அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட்டுள்ளார். தமிழகத்தில் அ.தி.மு.க.தான் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது.,''  என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது:

தூத்துக்குடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வருகை தருகிறார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ரூ.23 கோடி மதிப்பிலான புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்து வைக்கிறார். டெல்லியில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசார சி.டி.யை வெளியிடும்போது, தூத்துக்குடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு சி.டி.யை வெளிடுவார்.

கூட்டணியை பொறுத்தவரை. தி.மு.க. கூட்டணி விரைவில் உடைந்துவிடும். அங்கு கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லை. கூட்டணி தர்மத்தை மதித்து கடைபிடிக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டுமே. அதனால் தான் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கும், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை அ.தி.மு.க. வழங்கி உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் விரைவில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வர தயாராக உள்ளன. அது நிச்சயமாக நடக்கும். முன்பு அ.தி.மு.க. உடன் பிற கட்சிகள் கூட்டணி அமைக்கும்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாதான் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டனர். அதே போன்றுதான் தற்போதும் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட்டுள்ளார். தமிழகத்தில் அ.தி.மு.க.தான் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். 
 

தலைப்புச்செய்திகள்