Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்வர் பழனிசாமி - நடிகர் சூரி  சந்திப்பு ஏன்? 

அக்டோபர் 13, 2020 08:46

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நடிகர் சூரி திடீரென சந்தித்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூரி நில மோசடி தொடர்பாக புகார் தெரிவித்திருந்த நிலையில் முதல்வரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக அண்மையில் எடப்பாடி பழனிசாமியை துணை முதல்வரும் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. நிர்வாகிகள், திரை உலகைச் சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர் சூரியும் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது மலர்க்கொத்து வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சூரி வாழ்த்து தெரிவித்தார்.

அண்மையில் நடிகர் விஷ்ணு விஷால் தந்தையின் மீது நடிகர் சூரி நிலம் வாங்கி தருவதாகக் கூறி, 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக போலீஸில் புகார் தெரிவித்திருந்தார். இதற்கு விஷ்ணு விஷால் தரப்பு பதில் தந்திருந்தது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் சூரி சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் சேருவதும், பா.ஜ.க.வில் சேருவதும், தி.மு.க.வில் சேருவதும் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் நடிகர் சூரி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்