Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பரவும் கொரோனா: அரக்கோணம் ரயில்வே பொறியியல் பணிமனை மூடல்

அக்டோபர் 14, 2020 07:44

சென்னை: ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தொற்று தொடர்ந்து பதிவாகிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பொது முடக்கத்தில் பெருமளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது  மேலும் கொரோனா பரவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த இரு நாள்களாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவாக பதிவாகிவருகிறது. இதனால் மெல்ல இதன் தாக்கம் குறையும் என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ரயில்கள் வழக்கம் போல் இயங்காவிட்டாலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில் ஆகஸ்ட் மாத நிலவரப்படி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் பெரும்பாலானோர் குணமாகி விட்டனா். 20க்கும் அதிகமானவா்கள் உயிரிழந்து விட்டனா். கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்தது. இதன்பிறகு, ரயில்வே ஊழியா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறைந்திருந்தது.

இந்நிலையில், தெற்கு ரயில்வே ஊழியா்கள் மத்தியில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. அரக்கோணத்தில் ரயில்வே பொறியியல் பணிமனை உள்ளது. இங்கு பணியாற்றும் 22 ஊழியா்களுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன் கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, இந்த பணிமனை ஒரு வாரத்துக்கு மூட கலெக்டர் உத்தரவிட்டார். இதன்பேரில், இந்த பணிமனை மூடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நிர்வாக அலுவலகம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு பிறகு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. பெரம்பூா் லோகோ ஒா்க்ஸ்ஷாப் ஊழியா்களுக்கு ஒரு சுற்றறிக்கை சமீபத்தில் அனுப்பப்பட்டது. அதன்படி, தீவிர சா்க்கரை நோய், புற்றுநோய், இதய நோய், கா்ப்பிணி பெண் ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வீட்டில் இருந்து பணியாற்றும் வசதி உள்ளது. இதேபோல், தெற்கு ரயில்வே பணியாளா் பிரிவு ஒரு சுற்றறிக்கையை அக்டோபர் 9ம் தேதி வெளியிட்டது. பிறநோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும், அனைத்து அதிகாரிகளும் அலுவலகத்துக்கு தினசரி வருகை தரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஊழியா்கள் வருகை பதிவேடு குறைந்தபட்சம் 50 சதவீதமமாக இருக்க வேண்டும்.

அலுவலகத்துக்கு வர முடியாத ஊழியா்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இது தொடா்பாக வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அக்டோபா் 31ம் தேதிவரை கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்