Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனியாக செல்பவர்களை குறிவைத்து போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது

அக்டோபர் 15, 2020 06:53

சென்னை: மதுரவாயல் பைபாஸில் தனியாக செல்பவர்களை குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது  செய்யப்பட்டனர். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸில் இரவு நேரங்களில் வேலை முடிந்து செல்பவர்களை குறிவைத்து செல்போன் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் ஒரே மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வந்த மூன்று பேரை மடக்கி சோதனை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுரவாயல் நெற்குன்றத்தை சேர்ந்த தேவகுமார்(23), பிரகாஷ்ராஜ்(19), ராமன்(20), என்பது தெரியவந்தது. இவர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் பைபாஸில் இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களை வழிமறித்து அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பது மற்றும் பேசி கொண்டு செல்லும் வட மாநில வாலிபர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை கைது செய்து வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பிருக்கிறதா? என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்