Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ம.நீ.ம. கட்சி முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் 

அக்டோபர் 17, 2020 04:36

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி சட்டசபை தேர்தலில் பிரச்சாரம் செய்யப்போகிறோம்,''  என்று அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் கூறியுள்ளார். வருகின்ற 2021 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது.

சென்னை பாண்டிபஜாரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் அக்கட்சியின் மாநில நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வரும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதில் கட்சியின் நிலைப்பாடு என்ன?, கட்சிக்கு தேவையான நிதியை வலுப்பெறச் செய்வது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது மற்றும் வேட்பாளர்காள் தேர்வு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? அல்லது பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா? என்பது பற்றியும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும், 22 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. அதில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தது. குறிப்பாக, கோவை, தென் சென்னை, வட சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலான வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சி தனது கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக ஆலோசனைக்கூட்டத்தில் தனித்து போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆலோசனை கூட்டத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் ம.நீ.ம. கட்சி துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்ததாவது:
வரும்  2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்யப்போகிறோம்.  ஆலோசனைக் கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணிக்காக வாய்ப்புகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பு கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அளிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு களப்பணியாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட நாமே தீர்வு இயக்கத்தில் பங்காற்றியவர்களுக்கும் களப்பணியாற்றியவர்களுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வருகின்ற 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள நிர்வாகிகளை கூட்டத்தில் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார். இவ்வாறு மகேந்திரன் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்