Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: ஆறு மாவட்டங்களுக்கு கனமழை! 

அக்டோபர் 22, 2020 07:54

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆறு மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்றும், அடுத்த இரு நாள்களுக்கான மழை பற்றிய முன் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாகவும், அதனோடு இணைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக பகுதிகளில் நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம், தர்மபுரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்கள் குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரிமளம் (புதுக்கோட்டை) 6 சென்டி மீட்டர் மழையும், வேடசந்தூர் (திண்டுக்கல்), தேவலா (நீலகிரி) தலா 5 சென்டி மீட்டர் மழையும், மதுரை விமானநிலையம் (மதுரை), தளி (கிருஷ்ணகிரி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை) ஆகிய இடங்களில் தலா 4 சென்டிமீட்டர் மழையும், திருமங்கலம் (மதுரை), அருப்புக்கோட்டை (விருதுநகர்), திருத்தணி (திருவள்ளூர்), பரூர் (கிருஷ்ணகிரி), கோவை தெற்கு, ஆரணி (திருவண்ணாமலை), காரைக்குடி (சிவகங்கை), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), DGP அலுவலகம் (சென்னை), அலங்காயம், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்க கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்