Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தி.மு.க. அ.தி.மு.க. கரம் கோர்க்க மு.க.ஸ்டாலின் அழைப்பு! 

அக்டோபர் 22, 2020 08:01

சென்னை: மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க ஆளுநரை தி.மு.க. அ.தி.மு.க. இணைந்து வலியுறுத்துவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலைப் பொறுத்தவரை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எப்போதும் எதிரும், புதிருமாக இருந்து வந்துள்ள நிலையில் இணைந்து போராடலாம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வுக்கு அழைப்புவிடுத்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், இதுவரை ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆளுநர் முடிவு தெரிந்த பிறகு மருத்துவ சேர்க்கை நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என ஆளுநருக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்தார். தற்போது கடிதமும் எழுதியுள்ளார். தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் ஆகியோர் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “அது தன்னுடைய பரிசீலனையில் இருப்பதாகவும், விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டிய நடவடிக்கையை எடுக்கிறேன் என்றும் தெரிவித்தார். நிச்சயம் நல்ல முடிவை அறிவிப்பேன் எனவும் உறுதியளித்தார். ஆளுநரை அரசு கட்டாயப்படுத்த முடியாது என்பது அரசியலமைப்பிலேயே உள்ளது. அதனால்தான் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.” என்று கூறினார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த நேர்வில் அ.தி.மு.க. அரசுடன் இணைந்து போராட தி.மு.க. தயார். கட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவித்திட தமிழக முதல்வர் முன்வர வேண்டும். இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்