Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் தினசரி 429 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு: டெல்லி முதலிடம்

ஜனவரி 24, 2019 01:12

சென்னை: நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனால் நாள்தோறும் 25,940 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. ஆனால் 40 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் ஆறுகள் மற்றும் கடலில் கலப்பதால் அவற்றை சேகரிக்க முடிவதில்லை. 

இதன் காரணமாக கடலில் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுகிறது. மண் மற்றும் நீரில் மாசு ஏற்படுகிறது. பிளாஸ்டிக்கை திண்பதால் கால்நடைகள் மற்றும் மிருகங்கள் உயிரிழக்கின்றன. திறந்தவெளியில் எரிக்கப்படுவதால் மனிதர்களின் உடல்நலத்துக்கு தீங்கு ஏற்படுகிறது. சுற்றுப்புற சூழலிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

எனவே ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, மற்றும் பெங்களூர் உள்ளிட்ட 60 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் நாட்டில் பயன்படுத்தப்படும் மொத்த பிளாஸ்டிக் பயன்பாட்டில் 50 சதவீதம் மேற்கண்ட நகரங்களில் உபயோகப்படுத்தப்படுவது தெரிய வந்தது. அதே நேரத்தில் இந்த 60 நகரங்களில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் நாள் ஒன்றுக்கு 4,059 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. 

அவற்றில் சென்னையில் மட்டும் 429 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இது மொத்தமாக சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளில் 9 சதவீதம் ஆகும். அதன்மூலம் சென்னை 2-வது இடம் பெறுகிறது. டெல்லி முதலிடம் வகிக்கிறது. இங்கு தினமும் 689 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.

தலைப்புச்செய்திகள்