Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா வைரஸ் பாதிப்பால் பா.ஜ.க. பிரமுகர் தந்தை உயிரிழப்பு:  அரசு மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 23, 2020 12:20

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கொரோனா வைரஸ் பாதிப்பால், பா.ஜ.க.   பிரமுகரின் தந்தை உயிரிழந்தார். டாக்டர்கள் அளித்த சிகிச்சையில் குறைபாடு என தெரிவித்து கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை முன் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒசூர் மேற்கு மண்டல பா.ஜ.க. பொருளாளராக இருப்பவர் பாபு. இவரது தந்தை கோவிந்தப்பா (70). இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனை முன் கூடிய பா.ஜ.க.வினர், மருத்துவர்களின் மெத்தனத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல விரும்பியதாகவும், ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.   தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதி அளித்திருந்தால் உயிர் இழப்பு ஏற்பட்டிருக்காது என கூறினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பா.ஜ.க.வினரிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது முறைப்படி புகார் அளித்தால், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பா.ஜ.க.வினர் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தலைப்புச்செய்திகள்