Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! 

அக்டோபர் 24, 2020 06:16

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் மாநில அரசு செலவில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்,''  என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். புதுக்கோட்டையில் பல்வேறு அரசு நலத்திட்ட பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி தெரிவித்ததாவது: காவிரி டெல்டா மாவட்டங்களில் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. அதிக விளைச்சல் காரணமாக அனைத்து நெல் மூட்டைகளையும் அரசால் கொள்முதல் செய்ய முடியவில்லை.

உதாரணமாக கடந்த ஆண்டு 23 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதுவே நடப்பாண்டு 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு லாபம் ஈட்டும் வகையில் தான் இருக்கின்றன. ஆனால், சில அமைப்புகள் தான் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

பின்னர் புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். இதையடுத்து முதல்வர் பேசியதாவது:
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினால் தமிழகத்திற்கு நிறைய முதலீடுகள் கிடைத்துள்ளன. இதன்மூலம் வேலைவாய்ப்பு பெருகியுள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்பி வருகிறார். விவசாயிகள் நலனில் அதிக அக்கறையுடன் செயல்படுவது அ.தி.மு.க. அரசு மட்டுமே. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை சார்பாக ஏராளமான பணிகள் நடந்துள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது.

தடுப்பூசி பரிசோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பயன்பாட்டிற்கு வந்தவுடன் அரசு செலவில் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும். முன்னதாக பீஹார் மாநில தேர்தலை ஒட்டி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் தாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பீஹார் மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு வழங்கும். எனவே, இலவசமாக வழங்குவது பற்றி சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. விளக்கமளித்தது. இதைப் பின்பற்றி தமிழக அரசும் இலவச தடுப்பூசி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்