![](admin/uploads/.62deae7bd70176.25066024.jpg)
Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: மதுரை மக்களவை எம்.பி சு.வெங்கடேசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் மனித இனத்திற்கே பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. சாதாரண மக்கள் தொடங்கி அதிகாரிகள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பிரதமர், அதிபர் என ராஜ குடும்பங்கள் வரை கொரோனா ஒரு கை பார்த்துவிட்டது. தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கே இம்மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு பின் தீவிர சிகிச்சையின் பலனாக குணமடைந்தார்.
இந்நிலையில், மதுரை மக்களவை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அவர் ட்விட்டரில், “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமுடன் இருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
வெங்கடேசனுடன் அண்மையில் தொடர்பில் இருந்தவர்களை தேடும் பணியில் மாவட்ட சுகாதார அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெங்கடேசன் எம்.பி. மட்டுமல்லாமல் அவரது மனைவி, ஒரு மகள் மட்டும் மற்றொரு உறவினர் ஆகிய மூவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெங்கடேசனுடன் தொடர்புகொண்டவர்களில் 24 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 50 பேருக்கும் மேற்பட்டவர்கள் வெங்கடேசனுடன் தொடர்பில் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.