Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேவைப்பட்டால் காங்கிரஸை எதிர்த்து போராடுவேன்: ராகுல் காந்தி அதிரடி! 

அக்டோபர் 25, 2020 05:54

புதுடெல்லி: தேவைப்பட்டால் காங்கிரஸ் அரசை எதிர்த்தும் போராடுவேன்,''  என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தலித் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு குடும்பத்தினரின் அனுமதியின்றி தகனம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தடைகளையும் தாண்டி காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அப்பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஹோஷியர்பூரில் ஒரு சிறுமி கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது: ஹத்ராஸ் விவகாரத்தில் பிக்னிக் செல்வது போல அண்ணனும், தங்கையும் (ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி) புறப்பட்டனர். ஆனால் ஹோஷியர்பூர் விவகாரத்தில் ஏன் அப்படி செய்யவில்லை?

இதில் காங்கிரஸின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது. ட்வீட் போடும் தலைவரிடம் (ராகுல் காந்தி) இருந்து எந்த நடவடிக்கையும் இல்லாதது ஏன்? இந்த இரட்டை வேடம் காங்கிரஸுக்கு உகந்ததா? சுமார் 35 எம்.பி.க்கள் ஹத்ராஸ் குறித்து ட்விட்டரில் விமர்சித்தனர். அவர்கள் எல்லாம் இன்று எங்கே?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இதை குறிப்பிட்டு நிர்மலா சீதாராமன் கேள்வியெழுப்பினார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ராகுல் காந்தி, “உத்தரப் பிரதேச அரசு பொய் சொல்வதை போல, பாலியல் வன்புணர்வே நடக்கவில்லை என பஞ்சாப், ராஜஸ்தான் அரசுகள் மறுக்கவில்லை. சம்பந்தபட்ட பெண்களின் குடும்பங்கள் மிரட்டப்படவும் இல்லை, அவர்களுக்கு நீதி கிடைக்க முட்டுக்கட்டை போடவும் இல்லை. இதையெல்லாம் காங்கிரஸ் அரசு செய்தால், நானே அங்கு சென்று நீதிக்காக போராடுவேன்,” என்று தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்