Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, புறநகர் ரயில் சேவை, திரையரங்குகள் திறப்பு ஆகியவை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு மாத இறுதியிலும் அடுத்தக்கட்ட தளர்வுகள் என்ன?, எதற்கு அனுமதி?, எதற்கு தடை? என மக்கள் விவாதிக்க தொடங்கிவிடுகின்றனர்.
ஏனெனில் மாத இறுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து அக்டோபர் 28ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த முறை எதற்கெல்லாம் அனுமதி வழங்கப்படும்?,எந்தெந்த துறைகளில் தளர்வு அறிவிக்கப்படும்? என்ற தகவல் வெளியாகி வருகிறது. பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், சென்னையில் மெட்ரோ ரயில்களும் இயங்கிவருகின்றன. ஆனால், புறநகர் மின்சார ரயில்களுக்கான தடை மட்டும் தொடர்ந்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை அனைத்து மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் ஆகியவை இயங்கினாலும் மக்கள் கூட்டம் அலைமோதும்.
பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அத்துடன் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளும் வரவுள்ளதால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. இதனால் தி.நகருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இருப்பினும், புறநகர் மின்சார ரயில்களை இயக்கினால் கூட்ட நெரிசலை குறைக்கலாம் என்று கூறப்படும் நிலையில் மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள ஊரடங்கு தளர்வு அறிவிப்பில் சென்னை புறநகர் மின்சார ரயில் இயக்கம் எனும் அறிவிப்பு கட்டாயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏழு மாத காலமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் அத்துறையைச் சேர்ந்தோர் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். மத்திய அரசு திரையரங்குகள் திறப்புக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டன. தமிழகத்திலும் திரையரங்குகளை திறக்க திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வரைச் சந்தித்து மனு அளித்த நிலையில் அது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசிடமிருந்து உறுதியான முடிவுகள், அறிவிப்புகள் வெளியாகவில்லை. கொரோனா பரவல் குறைந்தபின்னரே அதுபற்றி முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து வருகிறார். கொரோனா பாதிப்பு சமீப நாள்களாக குறைவாக பதிவாகிவரும் நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்தும் வரும் 28ம் தேதி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.