Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்வராக வேண்டும் என ஆசைப்பட்டால் என்ன தவறு? வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் அதிரடி!

அக்டோபர் 26, 2020 09:55

ராணிப்பேட்டை: தமிழக முதலமைச்சராக வேண்டும் என தாம் ஆசைப்படக் கூடாதா? என்றும் ஆசைப்பட்டால் என்ன தவறிருக்கிறது?''  என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். தி.மு.க. கூட்டணியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு வரும் சூழலில் திருமாவளவனின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தீட்சா பூமி திருவிழா நடைபெற்று வருகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள புத்த விஹார் மற்றும் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தாம் தமிழக முதலமைச்சராக வந்தால் மதுவை ஒழிக்கத்தான் முதல் கையெழுத்து போடுவேன் என உறுதியளித்துள்ளார். திருமாவளவன் தன்னை முதலமைச்சராக வந்தால் எனக் குறிப்பிட்டு பேசிய போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கரவொலி எழுப்பி ஆரவாரத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திருமாவளவனிடம் இருந்து இது போன்ற கருத்தை எதிர்பார்த்து காத்திருந்தது போல் வி.சி.கவினர் கொண்டாடினர். தொடர்ந்து அவர்களை அமைதிப்படுத்தி பேசிய திருமாவளவன், முதலமைச்சராக வேண்டும் என நான் ஆசைப்படக் கூடாதா..? ஆசைப்பட்டால் என்ன தவறு..? என வினவினார். தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்து வரும் நிலையில் திருமாவளவனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி வரும் சூழலில் தாம் ஏன் முதலமைச்சராக ஆகக் கூடாது? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

திருமாவளவன். மனுதர்ம நூல் குறித்த திருமாவின் பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் சூழலில், அவருக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு குரல் கொடுத்திருந்தார். ஆனால், அப்படியிருந்தும் திருமாவளவனுக்கு ஏற்பட்டுள்ள இந்த திடீர் மனக்கசப்பிற்கான காரணம் குறித்து தி.மு.க. சீனியர்களுக்கு புரியவில்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள முக்கியத் தலைவரான திருமாவளவனின் இந்தக் கருத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்