Tuesday, 30th April 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு விலையில்லா முட்டைகளை வழங்கினார். கொரோனா தொற்று பரவலால் சில மாதங்களாக பள்ளிகள் திறக்காத நிலையில், கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு உணவுப் பொருள்களை பள்ளிகளின் மூலம் நேரடியாக சில நாட்களுக்கு முன் வினியோகிக்கபட்டது. அதனுடன் ஒவ்வொரு மாணவருக்கும் முட்டைகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளி மாணவர்களுக்கும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் பத்து முட்டைகள் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா முட்டைகளை சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு பிரிவு) வீர ராகவன் வழங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம், தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ தாயுமானவர் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர், செல்வமீனாள், முத்துலெட்சுமி, முத்துமீனாள், சத்துணவு அமைப்பாளர் சரளாதேவி, சமையலர் சரசு ஆகியோர் செய்து இருந்தனர். அடையாள அட்டையை காண்பித்து மாணவர்கள் பொருள்களை பெற்றுச் சென்றனர்.
மாணவர்கள் வரமுடியாத பட்சத்தில் அவர்களது பெற்றோர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை காண்பித்து சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கிச் சென்றனர். கடந்த மாதத்தில் முதல் தவணையாக மூன்று மாதங்களுக்கு அரிசியும், பருப்பும் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் முறையாக தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு 65 நாட்களுக்கு உண்டான அரசியும், பருப்பும் வழங்கப்பட்டது. தற்போது விலையில்லா முட்டையும் வழங்கப்பட்டுள்ளது.