Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண்களுக்கு மனுதர்மம் தேவையில்லை: பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவர் அதிரடி

அக்டோபர் 30, 2020 09:07

சென்னை: பெண்களுக்கு மனுதர்மம் தேவையில்லை,''  என்று பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் அதிரடியாக தெரிவித்துள்ளார். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதாகக் கூறப்படும் மனுஸ்மிருதி, அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்துகிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுகிறது. அவர்களைக் கொலை செய்வதையும் நியாயப்படுத்துகிறது. குறிப்பாக, பெண்கள் அனைவரையும் மிக மிகக் கேவலமாக சித்தரிக்கிறது. இதன் காரணமாக மனுஸ்மிருதியை அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் தீயிட்டு கொளுத்தினர்.

இதனிடையே, பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதிக் குடிகளையும், குறிப்பாக, பெண்களையும் மிகக்கேவலமாக இழிவுபடுத்துவதும் வெறுப்பைப் பரப்புவதுமான மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக, மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி கடந்த மாதம் திருமாவளவன் பேசிய உரை சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது. இந்த விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேசமயம், மனுஸ்மிருதிக்கு குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க.வை சேர்ந்த பெண்கள் மற்றும் இந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்து திருமாவளவனை கடுமையாக விமர்சித்து வந்தனர். அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்து குஷ்பு உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், தொல்.திருமாவளவனுக்கு தி.மு.க. ம.தி.மு.க. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சியினர் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த பெண்கள் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.து. அதில், மனுஸ்மிருதிக்கு எதிரான கருத்தை அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பெண்களுக்கு மனுதர்மம் தேவையில்லை என்று பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை தான் அவசியம், மனுதர்மம் தேவையில்லை என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ள கருத்து பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக பா.ஜ.க. மாநில துணைத் தலைவராக இருக்கும் வானதி சீனிவாசனை அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவராக அக்கட்சி மேலிடம் நியமித்து உத்தரவிட்ட நிலையில், ''பெண்களுக்கு மனுதர்மம் தேவையில்லை'' என்று தெரிவித்ததால் அனைத்து தரப்பினரும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்