Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோபி: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சகவுண்டன்பாளையத்தில் மது போதையில் தாயை அடித்துகொன்று தலைமைறவான மகனை கோபி காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோபிசெட்டிபாளைம் அருகே உள்ள நஞ்சகவுண்டன்பாளையத்தில் மாகாளி என்ற பெண்மணி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகன் கருப்புசாமியுடன் வசித்து வருகிறார்.
மாகாளியின் மகன் கருப்புச்சாமியும் கூலி வேலைக்கு சென்றுவிட்டு நாள் தோறும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தாய் மாகாளியை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கருபுச்சாமிக்கு பயந்து மாகாளி கடந்த நான்கு மாதங்களுக்கு முன் மோவானியில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு சென்று தங்கியிருந்து அங்கேயே கூலி வேலைக்கு சென்றுவந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக உடல்நலமின்றி இருந்த மாகாளியை பார்க்க கருப்புச்சாமி குடிபோதையில் மேவானிக்கு சென்றுள்ளார்.
அங்கு தாய் மாகாளியை பார்த்து கோபியில் உள்ள தங்களது வீட்டுக்கு வரும் படி அழைத்துள்ளார். மாகாளி வர மறுக்கவே அவரை அடித்து ஆட்டோவில் ஏற்றியுள்ளார். பிறகு உடல்நலமின்றி இருந்த மாகாளியை ஆட்டோவில் நஞ்சகவுண்டம்பாளைத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டில் படுக்க வைத்து பின் கருப்புச்சாமி அக்கம் பக்கம் உள்ள தனது உறவினர்களிடம் தனது தாய் மாகாளி உடல் நலக்குறைவினால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அதனை நம்பிய உறவினர்கள் உடலை நல்லக்கம் செய்ய முயன்றுள்ளனர். தகவலறிந்து மேவாணியிலிருந்து வந்த மாகாளியின் சித்தி அம்மாசை, மாகாளியை அவரது மகன் கருப்புச்சாமி மேவாணியிலேயே அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் மாகாளில் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாகாளியின் உடலை பரிசோதனை செய்து பார்த்ததில் மாகாளியின் உடல் மற்றும் தலையில் காயங்கள் உள்ளதால் மாகாளி அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதி கருப்புச்சாமியை விசாரணை செய்ய தேடியபோது அவர் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
மேவாணியிலிருந்து ஆட்டோவில் அழைத்துவரும் வழியில் தாய், மகன் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அதில் மகன் தாக்கியதில் மாகாளி உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். அதனை தொடந்து மாகாளி சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து கருப்புச்சாமியை தேடி வருகின்றனர். மதுபோதையில் தாயை மகன் அடித்துகொன்ற சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.