Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பதி கோயிலில் 24 மணி நேரமும் இலவச தரிசன டோக்கன்

நவம்பர் 04, 2020 11:07

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரமும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும்,''  என்று திருமலை தேவஸ்தானம் தகவல் அளித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் கோயில்கள் உள்பட மத வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன. வழக்கமாக பூஜைகள் கோயில்களில் நடைபெற்ற போதும், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த பொது முடக்கம் வருகிற 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுமுடக்கம் என்ற பெயரில் பல்வேறு தளர்வுகளை அளித்துள்ள மத்திய அரசு, ஜூன் 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்கவும் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுமதி அளித்தது. தொடர்ந்து, திருப்பதியில் இருந்து திருமலைக்கு ரூ.300 தரிசன டிக்கெட் பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, திருப்பதியில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து அர்ச்சகர்கள் பலியானதால், கோயில் நடை மூடப்பட்டது.

அதன்பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி முதல் திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 30ம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்தது. அதேசமயம், இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்ததையடுத்து, கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து ஏழுமலையான் தரிசனத்திற்கு இலவச டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. திருப்பதி அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் நாள்தோறும் 3,000 இலவச தரிசன டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. காலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த டோக்கன்கள் வழங்கப்படுகிறது.

இதையொட்டி பக்தர்கள் முதல்நாள் இரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர். அடுத்த நாள் காலை சில மணி நேரங்களிலேயே டோக்கன்கள் தீர்ந்து விடுகின்றன. இதனால் பக்தர்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிலையில், திருப்பதி கோயிலில் 24 மணி நேரமும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தகவல் அளித்துள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு 6,000 இலவச தரிசன டிக்கெட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் இடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழ்நிலையால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக, இலவச டோக்கன் வழங்கும் போது கூட்ட நெரிசல் ஏற்படுவதால், குழந்தைகள், முதியவர்களை அழைத்து வர வேண்டாம் என்று அறிவுறுத்திய திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி, படிப்படியாக இலவச டோக்கன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கின்றனர். வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், இலவச தரிசன டோக்கன்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சாமி தரிசனம் செய்யும் போது, சரீர விலகலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிவது கட்டாயம், கிருமி நாசினி பயன்படுத்துவது என்பன உள்ளிட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கோயிலை விட்டு வெளியே வந்த மலையப்ப சுவாமி:

முன்னதாக, திருப்பதி திருமலையில் 226 நாட்களுக்குப்பின், ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி கோயிலை விட்டு முதன்முறையாக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் கோயிலுக்குள் அனைத்து சேவைகளும் பக்தர்கள் இல்லாமல் நடத்தப்பட்டு வந்த நிலையில், 226 நாட்களுக்குப்பிறகு கோயிலை விட்டு வெளியே வந்து காட்சி அளித்த மலையப்ப சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்