Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சமூக வலைத்தள அழகியிடம் ரூ.4 லட்சம் பறி கொடுத்த வியாபாரி- போலீசில் புகார்

நவம்பர் 05, 2020 06:28

மும்பை: மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த 41 வயது வியாபாரிக்கு, சமூக வலைதளத்தில் தீபாலி என்ற பெயரில் பெண் ஒருவரின் அறிமுகம் கடந்த மாதம் 29-ந்தேதி கிடைத்தது. இதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி செல்போனில் சாட்டிங் செய்து வந்தனர். பின்னர் கடந்த 2-ந் தேதி சாட்டிங் செய்த போது தீபாலி பிவண்டியில் உள்ள வீட்டிற்கு வரும்படி வியாபாரிக்கு அழைப்பு விடுத்தார்.

இதனை நம்பிய வியாபாரி தீபாலி வீட்டிற்கு சென்றார். சிறிது நேரத்தில் அவரது வீட்டிற்கு 2 பெண்கள் மற்றும் வாலிபர் வந்தனர். அங்கிருந்த வியாபாரியை பிடித்து 4 பேரும் தாக்கினர். இது பற்றி யாரிடமும் தெரிவித்தால் தீபாலியை கற்பழிக்க முயன்றதாக போலீசில் புகார் அளிப்போம் என மிரட்டி உள்ளனர்.

இதையடுத்து வியாபாரி வங்கிக்கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்தை தங்களது வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்தனர். பின்னர் கிரெடிட் கார்டு மூலம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்திற்கு பொருட்களை வாங்கினர். இதையடுத்து வியாபாரியை வலுக்கட்டாயாக வீடியோ எடுத்து, அதில் தீபாலியிடம் இருந்து கடனாக பணம் பெற்றதாகவும், இதனால் அந்த பணத்தை திருப்பி பெற்றதாக பதிவு செய்து கொண்டனர். அதன் பின்னர் அந்த வியாபாரியை விடுவித்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் தீபாலி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்