Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளிகள் திறப்பு: முடிவை மாற்றிய தமிழக அரசு

நவம்பர் 06, 2020 05:29

சென்னை: பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தற்போது நிலைமையை கருத்தில் கொண்டு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கப்படும் என்று தனது முடிவை மாற்றி அறிவித்துள்ளது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட பள்ளிகளை திறப்பது குறித்து அக்டோபர் 15ம் தேதிக்கு மேல் மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பள்ளிகள் திறப்பிற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.

அந்த வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறை மற்றும் தொற்று நோய் சிறப்பு வல்லுநர் குழுவுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, வரும் நவம்பர் 16ம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் விடுமுறைகள் வருவதை கருத்தில் கொண்டும், மாணவர்கள் பாடங்களை முழுவதுமாக கல்வி தொலைக்காட்சி வாயிலாகவோ அல்லது இணையவழி வாயிலாகவோ கற்பது அவர்களுக்கு முழுமையான நிறைவினை அளிக்காது என்பதையும் ஆசிரியர்கள் மூலமாக நேரடியாக வகுப்பறையில் கற்பதன் மூலமாகத்தான் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்துக்கொண்டு கற்பதற்கும், தேர்வினை எதிர்கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.
பள்ளிகள் திறப்பு டிசம்பரா, ஜனவரியா?:

ஆனால், தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் அடங்காத சூழலில் பள்ளிகளை திறந்தால் மிகப்பெரிய ஆபத்து மாணவர்களுக்கு வரும் என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட தமிழகத்திலுள்ள பல்வேறு  அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பள்ளிகளை தற்போது திறக்கக் கூடாது என்று அரசை வலியுறுத்தி வந்தனர்.
இதனிடையே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித் துறை அமைச்ச்ர் கே.பி.அன்பழகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி பள்ளிகள் திறப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும், தனியார் பள்ளிகளின் நிர்வாகத்துடனும் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துகளை பெற்றிட ஏதுவாக வருகின்ற நவம்பர் 9ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணி அளவில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த கருத்து கேட்பு கூட்டங்களில், 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். கலந்துகொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளை திறப்பது குறித்து அரசால் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு பள்ளிகல்வித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்