Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நரேந்திர மோடியிடம் தோற்ற டொனால்டு ட்ரம்ப்: வம்பிழுக்கும் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா

நவம்பர் 07, 2020 05:23

புதுடெல்லி: அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்பை காட்டிலும் பிரதமர் மோடி கொரோனாவை சரியாக கையாண்டுள்ளார்,''  என்று  பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பீஹாரில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில், தர்பாங்கா மாவட்டத்தில் ஜல்லேவில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரச்சாரம் செய்த போது அவர் பேசியதாவது:

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனாவை சரியாக கையாள முடியவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், சரியான நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவின் 130 கோடி மக்களையும் பிரதமர் மோடி காப்பாற்றியுள்ளார். பொதுமுடக்க காலத்தில் 80 கோடி பேருக்கு ரேஷனில் உணவுப் பொருட்களையும், 15 கோடி பெண்களுக்கு பணத்தையும் பிரதமர் மோடி வழங்கியுள்ளார். இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

இதுவரையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை விமர்சிக்கும் வகையில் பா.ஜ.க.வினர் கருத்து தெரிவித்ததே இல்லை. பிரதமர் மோடிக்கும், அதிபர் ட்ரம்புக்கும் இடையேயான நட்பு குறித்து அனைத்து அரசியல் தலைவர்களும் அறிவர். இந்த நட்பை குறிவைத்து அமெரிக்க தேர்தலிலும் டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி இந்திய அமெரிக்கர்களிடம் பிரச்சாரம் செய்தது. இந்நிலையில், அமெரிக்க தேர்தலில் தற்போது ட்ரம்ப் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவே டொனால்டு ட்ரம்பை விமர்சிக்கும் வகையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்