![](admin/uploads/.5d859a48b0f0e2.27538555.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சகதியில் சிக்கி பெண் யானை உயிரிழந்தது. முதலைகள் கொன்றிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியான, பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா செல்லும் அடர்ந்த வனப்பகுதியில் பெண் யானை ஒன்று சகதியில் சிக்கி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குண்டுக்கல்பள்ளம் என்கின்ற அந்த இடத்தில் தண்ணீரில் மூழ்கி சேற்றில் சிக்கி பெண் யானை உயிரிழந்துள்ளது. 15 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யானை தண்ணீர் குடிப்பதற்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறி, அந்த பள்ளத்தில் இறங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக, பவானிசாகர் அணையின் உபரி நீர் வெளியேறி பள்ளத்தில் நிரம்பியுள்ளது. தண்ணீர் நிரம்பியுள்ள குண்டுக்கல் பள்ளத்தில் சேறும், சகதியுமாக இருந்த காரணத்தினால், யானையால் எழுந்து நடக்க முடியாமல் தண்ணீரிலேயே சிக்கிக் கொண்டது. அந்த பகுதி முழுவதும் முதலைகள் நிறைந்த பகுதி என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சகதியில் சிக்கிய யானையை முதலைகள் கொன்று இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. அல்லது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சகதியில் சிக்கிய யானையால் வெளியே வரமுடியாமல் போனதால் யானை இறந்து உள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு இறந்த யானையின் உடலை பவானிசாகர் வனத்துறையினர் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து அந்த யானையை மேலே கொண்டு வந்தனர். யானையின் வயிற்றுப் பகுதியில் ரத்தம் உறைந்து காணப்பட்டுள்ளதால் முதலைகள் அதனைக் கொன்று இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. யானையை வெளியே எடுத்து உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் தாளவாடியில் கரும்பு காட்டுக்குள் புகுந்த 3 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. அதேபோல கடந்த இரண்டு மாதங்களில் மூன்று யானைகள் இயற்கை மரணம் அடைந்துள்ளது என வனத்துறை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.