Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி

நவம்பர் 10, 2020 05:25

பெரம்பூர்: சென்னை, சென்ட்ரல், வால்டாக்ஸ் சாலையை சேர்ந்தவர் ஏழுமலை, மாற்றுத்திறனாளியான இவர், கடந்த 2015-ம் ஆண்டு சென்னை பெரு வெள்ளத்தின்போது மாநகர பஸ் மோதி பரிதாபமாக இறந்தார். அவர் இறப்புக்கு பின்பு, முதல்-அமைச்சர் நிவாரண நிதியான, ரூ.1 லட்சம் பெறுவதற்காக அவரது மனைவி புஷ்பா(வயது 50) மற்றும் மகன் சரவணன்(27) ஆகியோர் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் மனு செய்துள்ளனர். இவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிந்துரையின் பேரில், தண்டையார்பேட்டை, வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) அலுவலகத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் நிவாரண நிதி பெறுவதற்கு தாய், மகன் இருவரும் தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து பலமுறை அலைக்கழிக்கப்பட்டுள்ளனர் பின்னர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை செய்யும் இளநிலை உதவியாளர் முருகனை அணுகியுள்ளனர். அப்போது முருகன் இவர்களிடம் லஞ்சமாக ரூ.5 ஆயிரம் கொடுத்தால் தான் உங்களுடைய கோப்புகளை அனுப்ப முடியும் என திட்டவட்டமாக கூறியுள்ளதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த புஷ்பாவும் மகன் சரவணனும் இதுகுறித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில், விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்றிரவு, துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிசெழியன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர், ரசாயனம் தடவிய பணத்தை, சரவணனிடம் கொடுத்து, இளநிலை உதவியாளர் முருகனிடம் கொடுக்க செய்தனர்.

பணத்தை, முருகன் பெறும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முருகனை கையும் களவுமாக அதிரடியாக பிடித்து கைது செய்தனர். 5 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தால், தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்புச்செய்திகள்