Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பட்டாசுகள் வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி- கலெக்டர் உத்தரவு

நவம்பர் 10, 2020 05:39

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பது தொடர்பாக கலெக்டர் அருண் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி பொதுமக்கள், பட்டாசு தயாரிப்பாளர், விற்பனையாளர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதாவது, பட்டாசுகளை முறையான லைசென்சு பெற்றிருப்பவர்கள் மட்டுமே விற்பனை செய்யவேண்டும். இணையவழியிலோ, பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட பிற ஆன்லைன் சேவை நிறுவனங்கள் மூலமாகவோ பட்டாசுகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை மீறி பட்டாசுகளை விற்பனை செய்தால் அது கோர்ட்டு அவமதிப்பு ஆகும்.

பேரியத்தில் செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட வேதிப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளையே விழாக்கள் மற்றும் மத விழாக்களில் பயன்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பட்டாசுகளை தயாரிக்க கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவு சத்தம் எழுப்பும் பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும். இதை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும். ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100 மீட்டருக்கு வெளியே பட்டாசுகள் வெடிக்கப்பட வேண்டும். இதை போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறையினர் உறுதி செய்யவேண்டும்.

தீபாவளி பண்டிகையின்போது காலை 6 மணி முதல் 7 மணிவரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும். இதை உரிய அதிகாரிகளும், காவல்துறையினரும் உறுதி செய்யவேண்டும். இந்த நடைமுறையை சம்பந்தப்பட்ட அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். மீறினால் இந்திய தண்டனை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்