Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மனுஸ்மிருதியை தவறாக பேசிய விவகாரம்: திருமாவளவனுக்கு எதிரான மனு தள்ளுபடி! 

நவம்பர் 10, 2020 05:54

சென்னை: மனுஸ்மிருதி பற்றி அவதூறாக பேசியதாக வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதிக்குடிகளையும், பெண்களையும் மிகக்கேவலமாக இழிவுபடுத்தும் மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் அண்மையில் போராட்டம் நடத்தப்பட்டது.

முன்னதாக, மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி கடந்த மாதம் திருமாவளவன் பேசிய உரை சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது. இந்த விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, மனுஸ்மிருதி பற்றி அவதூறாக பேசியதாக திருமவளாவனுக்கு எதிராக காசிராமலிங்கம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில்,  'தனது சொந்த அரசியல் லாபத்துக்காக, இந்துக்களை அவமதித்ததுடன், சமூகத்தில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி, நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமாவளவனின் எம்.பி. பதவியை பறிக்க வேண்டும்'  என்று கூறப்பட்டிருந்தது. திருமாவளவன் சர்ச்சை பேச்சு காரணமாக அமைதியற்ற சூழல் உருவாகியுள்ள போதும், அவர் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பேசி வருவதாகவும், இதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகக் கூறி அவர் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாண உறுதிமொழியை மீறியுள்ளதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுஸ்மிருதி சட்ட புத்தகம் இல்லை; அதன் மொழிபெயர்ப்பு சரியா? தவறா? என தெரியவில்லை. மனுஸ்மிருதி பற்றி திருமாவளவன் தன்னுடைய விளக்கத்தை தந்துள்ளார். அது அவருடைய பேச்சுரிமை. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அரசியல் பிரச்னைகளுக்கு தீர்வுகாண நீதிமன்றத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் அப்போது நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதேசமயம், உரிய சட்டப்பிரிவுகளை குறிப்பிட்டு புதிய வழக்காக தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்