Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிகிச்சையின்போது போலீஸ் பாதுகாப்பு: பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.!!!

நவம்பர் 23, 2020 08:10

டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என அவரது தாயார் அற்புதம் அம்மாள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

இதற்கிடையே, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சிறுநீரக தொற்று காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, பேரறிவாளனுக்கு 45 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட 45 நாள் பரோல் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு வாரம் நீட்டித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சிகிச்சைக்கு செல்லும்போது பேரறிவாளனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தன்னை விடுவிக்க கோரிய பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜனவரி மாதத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

தலைப்புச்செய்திகள்