Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதையடுத்து தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் 19 சட்டமன்றத் தொகுதிகளில் கழக வேட்பாளர்கள் பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு குக்கர் சின்னம் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு பொதுச்சின்னம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் அப்போது உத்தரவிட்டனர். அதன்படி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு பொதுச்சின்னம் வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கழக வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் வழங்குமாறு டிடிவி தினகரன் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.
இதனடிப்படையில், தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் உள்ள 40 தொகுதிகளிலும், 19 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.