![](admin/uploads/.62861e42858535.98728340.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே படவேடு பகுதியில் செண்பகத்தோப்பு அணை உள்ளது. இதன் கொள்ளளவு 62 அடி உயரமாகும். இந்த அணை கட்டும் பணி 2007-ம் ஆண்டு நிறைவு பெற்றது. ஆனால் ஷட்டர்கள் இயங்காததால் தண்ணீர் சேமிக்க முடியாமல் போனது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஷட்டர் சீரமைக்க ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து ஷட்டர்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றது.
இந்த நிலையில் நிவர் புயல் மழை காரணமாக நேற்று அணையில் 55 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி நேற்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் உபரிநீரை திறந்து வைத்தார். அப்போது கலெக்டர் சந்தீப் நந்தூரி, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ஆவின் துணைத்தலைவர் பாரி பாபு, படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
உபரி நீர் திறந்து விடப்பட்டதால் கமண்டல நதி, நாகநதி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வருவாய்த்துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி 7 ஷட்டர்கள் வழியாக 6 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.