![](admin/uploads/.5fb6499a1001e3.93192228.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: இந்திய ஜனநாயகத்தின் ஆலயம் என்று வர்ணிக்கப்படுகிற பாராளுமன்றத்துக்கு, சுமார் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.971 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவது என மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இதன் பூமி பூஜை வரும் 10-ந் தேதி மதியம் 1 மணிக்கு நடக்கிறது; பிரதமர் நரேந்திர மோடி விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, டெல்லியில் நேற்று அறிவித்தார்.
இதையொட்டி அவர் மேலும் கூறியதாவது:-
தற்போதைய ஜனநாயகத்தின் ஆலயம் 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நமது சொந்த மக்களால் பாராளுமன்றத்துக்கு புதியதொரு கட்டிடம் கட்டுவது என்பது பெருமைக்குரியது. அது மட்டுமின்றி நமது சுயசார்பு திட்டத்துக்கு முக்கிய எடுத்துக்காட்டாகவும் இது அமையும். இந்திய கலாசாரத்தின் பன்முகத்தன்மையை புதிய கட்டிடம் வெளிப்படுத்தும். இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு அமர்வு, 2022-ம் ஆண்டு புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என்று நம்புகிறோம்.
பூமி பூஜைக்கான அழைப்பு, அனைத்துக்கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். விழாவில் சிலர் நேரில் கலந்து கொள்வார்கள். மற்றவர்கள் இணையவழியில் பங்கேற்பார்கள். கொரோனா கால வழிகாட்டும் விதிமுறைகள் பின்பற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.