Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை:
நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் சசிகலா படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரேணிகுண்டா மண்டல் பகுதியை சேர்ந்தவர் சசிகலா. இவர் ஆடுகள் மேய்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தரகராமா நகர் அடுத்துள்ள ரயில்வே தண்டவாளம் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, மர்ம பெட்டி ஒன்றை கண்டுள்ளார். இதையடுத்து அருகில் சென்று அந்த பெட்டையை கையில் எடுத்திருக்கிறார். பின்னர் பெட்டியை திறந்த போது திடீரென வெடித்து சிதறியுள்ளது.
இதில் தூக்கி வீசப்பட்ட சசிகலா உடல் முழுவதும் படுகாயமடைந்துள்ளார். இதுபற்றி தகவலறிந்து ஓடி வந்த மக்கள், சசிகலாவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் திருப்பதி ருயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ரேணிகுண்டா போலீசிடம் புகார் அளித்தனர். இதையடுத்து ரேணிகுண்டா நகர்ப்புற காவல்துறை சி.ஐ அஞ்சுயதாவ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
அங்கிருந்த தடயங்களைச் சேகரித்தனர். அதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறி இருப்பதை கண்டறிந்தனர். அந்த பெட்டியை யார் அங்கு வைத்திருப்பார்கள் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு பின்னணி குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சசிகலா ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது குடும்பத்தார் ஆறுதல் அடைந்துள்ளனர்.
நாட்டு வெடிகுண்டு பெட்டியை வைத்த மர்ம நபர்களை உடனடியாக கண்டறிய வேண்டும். அவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று சசிகலா உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.