Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரஜினி என்னை தந்தையாக தத்தெடுத்ததை மறக்க முடியாது -பாலம் கல்யாண சுந்தரம் நெகிழ்ச்சி 

டிசம்பர் 12, 2020 11:22

சென்னை: ரஜினி என்னை தந்தையாக தத்தெடுத்ததை மறக்க முடியாது என பாலம் கல்யாண சுந்தரம் நெகிழ்ச்சியுடன் கூறினார். இதுகுறித்து பாலம் கல்யாண சுந்தரம் கூறியதாவது: 

நான் எனது சொத்துகளை ஏழை மக்களுக்கு எழுதிக்கொடுத்தது பலரும் அறிந்த செய்தி. இதை தெரிந்துகொண்டு என்னை தன் தந்தையாக தந்தெடுத்தவர் ரஜினிகாந்த் என்பது பலருக்கும் தெரியாது.

கடந்த 1999ம் ஆண்டு காமராஜர் அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்றார். அப்பொழுது இதுபோன்ற ஒரு மனிதரைப் பார்ப்பதே கடினமான ஒன்று எனக் கூறிய அவர், தான் வாழும்போதே தன் சொத்துகளை எழுதித் தரும் மகானுக்கு நான் மகனாக வேண்டும் என மேடையிலேயே அறிவித்தார். மேலும் எனக்கு 2 மகள்கள் உள்ளனர், தந்தை இல்லை. எனவே, நீங்கள் எனக்குத் தந்தையாக என்னோடு இருக்க
வேண்டுமென போயஸ் கார்டன் இல்லத்திற்கு என்னை அழைத்து சென்றார் ரஜினிகாந்த்.

போயஸ் கார்டன் இல்லத்தில் ராஜாவைப் போல பல வசதிகள் பெற்று இருந்தாலும் சிறையில் இருப்பதைப் போல உணர்ந்தேன். பொதுமக்களுக்கு உதவி செய்ய என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை.

குறிப்பாக என்னைப் பார்க்க வரும் நபர்கள் ரஜினியைத்தான் பார்க்க வருகிறார்கள் என்ற அடிப்படையில், அவர்களுக்கு அனுமதி கிடைக்காத சூழல் ஏற்பட்டது. அது ரஜினிகாந்த்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னையாகவும் கருதப்பட்டது. இதனால் ஒரு வருடம் கழித்து அவரது வீட்டிலிருந்து நான் வேறு பகுதிக்கு சென்றுவிட்டேன். 

எப்பொழுது வேண்டுமானாலும் என்னை வந்து பார்க்கலாம் என்றும் 24 மணி நேரமும் உங்களுக்காக என் வீட்டின் கதவு திறந்திருக்கும் என்றும் ரஜினிகாந்த் என்னை வழியனுப்பி வைத்தார். ரஜினிகாந்த் வீட்டில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாதுகாப்பாக இருந்தேன். என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். என்றாலும், மக்களைச் சந்திக்க முடியாது. என் சமூக சேவைக்கு அது தடையாக இருந்தது.

ரஜினிகாந்த் நல்லவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் தமிழக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறார். நான் பொதுவானவன் என்பதால் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரிமும் அன்பை வளர்க்கும் எண்ணத்தோடு இருந்து வருகிறேன். ரஜினிகாந்த் 70வது பிறந்த பிறந்தநாளையொட்டி அவரை சந்திக்க வந்தேன். அவர் வீட்டில் இல்லாததால் எனது வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு வந்துவிட்டேன். இவ்வாறு கூறினார்.

தலைப்புச்செய்திகள்