Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரியர் மாணவர்களுக்கு டிசம்பர் 21 முதல் சிறப்பு தேர்வு: சென்னை பல்கலைக்கழகம்

டிசம்பர் 16, 2020 05:45

சென்னை: அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு டிசம்பர் 21ம் தேதி முதல் சிறப்பு தேர்வுகள் நடத்தப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால், இறுதிப் பருவத் தேர்வு தவிர, எஞ்சிய தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதேவேளையில், தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் அரியர் தேர்வுகளில் தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது விதிமுறைக்கு மாறானது என பல்கலைக்கழக மானியக் குழுவும் முறையிட்டது.

இதனிடையே, சென்னை பல்கலை. மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுக்கும் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. தற்போது, அரியர் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்த சென்னை பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, வருகின்ற 21-ம் தேதி முதல் அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இளங்கலை மற்றும் முதுகலையில் அரியர் வைத்துள்ள மாணவர்கள், இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதம் நடத்தப்படும் சிறப்பு தேர்வுகளில் பங்கேற்று தேர்வு எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்